டெல்லி தமிழ்ப் பள்ளிகளின் நிலை பற்றிய என்னுடைய பதிவுகளைப் படித்துப் பல மின்னஞ்சல்களும் தொலைபேசிகளும் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.
சில நாட்களாக தொலைபேசியில் சிலர் டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆட்சிக்குழுவின் அத்துமீறல்கள் விதிமுறை மீறல்கள் மற்றும் சிலரின் யதேச்சையான சர்வாதிகாரப் போக்கு பற்றிக் குறிப்பிட்டு பல கேள்விகளைக் எழுப்பி வருகிறார்கள். இப்போதைய தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்துக்கு எதிராக என்னென்ன முறைகேடுகளை உன்னால் பட்டியல் இட முடியும் என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள்.
சில டெல்லி தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்து பேசி அவர்கள் பட்டியல் இட்ட கீழ்க்கண்ட பிரச்னைகளை ஒவ்வொன்றாக உங்கள் முன் முன்வைக்கிறேன்.
இதற்கு ஏதேனும் பதில்கள் இருந்தால் யாராவது எனக்கு மின்னஞ்சல் செய்யலாம். அவற்றையும் வெளியிடுவேன்.
1. தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆட்சிமையின் கீழ் டெல்லியில் கீழ்க்கண்ட பகுதிகளில் ஏழு தமிழ்ப் பள்ளிகள் இயங்குகின்றன. அவை பல ஆண்டுகளுக்கு முன்பு வரை அமோகமாக கல்விப் பணி ஆற்றிவந்தன. கவனிக்க வேண்டும். இப்போது சத்தியமாக இல்லை.
இதற்கு எடுத்துக்காட்டு நான் முன்பு வெளியிட்ட அறிக்கைக்குக் கிடைத்த எதிர்வினைகள் 1 முதல் 7 வரை.
சரி. டெல்லியில் உள்ள அந்த ஏழு தமிழ்ப்பள்ளிகள் -
1. மந்திர் மார்க்
2. கரோல்பாக்
3.மோதிபாக்
4. இராமகிருஷ்ணபுரம்
5. லக்ஷ்மி பாய் நகர்
6.லோதி ரோடு
7. ஜனக்புரி
இப்பள்ளிகள் அனைத்திற்கும் தனித்தனியாக பள்ளி முதல்வர் தலைமையில் நிர்வாகக் குழு (Management Committee) இயங்க வேண்டும் என்பதை Delhi Schools Education Act & Rules 1973 விதி எண் 59 வலியுறுத்துகிறது. இதையே டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் வரையறுக்கப்பட்ட விதிமுறை எண் 14 வலியுறுத்துகிறது. இந்த நிர்வாகக் குழுவை தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்தலில் முறைகேடுகள் மூலம் வெற்றி பெற்று பதவிக்கு வரும் நிர்வாகக் குழுவுடன் தயவு செய்து ஒப்பீடு செய்ய வேண்டாம். நான் குறிப்பிடுவது டெல்லி அரசாங்கத்தின் கல்விச் சட்டம் வலியுறுத்தும் சட்டப்படியான நிர்வாகக்குழு.
நான் சொல்லும் நிர்வாகக் குழு 1973 வரை செயல்பட்டு வந்ததாகவும் பின்னர் அது செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டதாகவும் 1995ல் பள்ளி ஆசிரியர்கள் தில்லித் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். வழக்கு விசாரணையின் இறுதியில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தலைவர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் 13 செப்டம்பர் 2000 அன்று நான்கு பள்ளிகளில் இதுபோன்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள மூன்று பள்ளிகளில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் எழுத்து வழியாக உறுதியளித்தைத் தொடர்ந்து அவ்வழக்கு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.
பள்ளிகளுக்கான நிர்வாகக் குழுவின் தலைவர் அந்தந்தப் பள்ளியின் முதல்வர்களாக இருக்க வேண்டும் என்பது அரசாங்கம் வலியுறுத்தும் விதி. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 13 செப்டம்பர் 2000ல் அன்றைய தலைவர் அளித்த உறுதியை அதன் பின் வந்தவர்கள் காற்றில் பறக்கவிட்டு தங்கள் மனம் போன போக்கில் பள்ளிகளுக்கான தனித்தனி நிர்வாகக் குழுவை இன்று வரை மீண்டும் சொல்கிறேன் இன்று வரை செயல்படுத்தாமல் பெற்றோர்களையும் அரசாங்கத்தையும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றி வருகிறார்கள். எந்தப் பள்ளியிலும் இப்படிப் பட்ட சட்ட வரையறுக்குட்பட்ட நிர்வாகக் குழுவும் இல்லை. எந்தப் பள்ளி முதல்வரும் எங்கும் எதற்கும் தலைவராக செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. டெல்லி மாநில அரசின் கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் F-8/3/2000-AC/4641-46 dated the 26th December 2002 வலியுறுத்திக் கூறுவது என்னவென்றால் அந்தந்தப் பள்ளி தொடர்பான அனைத்து நிதி வசூல், பட்டுவாடா ஆகியவை பள்ளி முதல்வர்கள் மூலமே கவனிக்கப்பட வேண்டும் - இவற்றுக்கு பள்ளி முதல்வர்களே பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறது. காரணம் அந்தப் பள்ளி முதல்வர்கள்தான் அந்தப் பள்ளிகளின் நிர்வாகக் குழுவின் தலைவர்கள்.
ஆனால் எந்தத் தலைமை ஆசிரியரும் இவை போன்ற சட்ட வரையறுப்புக்குப் புறம்பாக இந்தத் தேர்தல் வழியாக வரும் ஆட்சிக்குழுவினரால் பள்ளிகளின் நிர்வாகக் குழுவில் தலைவராக செயல்படுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. இது ஏன்?
இதில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் எந்தப் பள்ளியின் முதல்வரும் இது குறித்து ஒரு முணுமுணுப்பு கூட எழுப்பாமல் இருப்பதன் பொருள் புரியவில்லை. அவர்கள் போட்ட வழக்குக்கு சாதகமாக டெல்லி உயர்நீதிமன்றம் 13 செப்டம்பர் 2000 அன்று தீ்ர்ப்பு வழங்கியும் அந்தத் தீர்ப்பு செயல்படுத்தப் படாததைக் கண்டித்து இந்த முதல்வர்கள் ஏன் தேர்தல் வழியாக வரும் நிர்வாகக் குழுவினரின் மேல் நீதி மன்ற அவமதிப்புக்கான வழக்குத் தொடரவில்லை என்பதும் பெரிய புதிர்தான். அத்தனை சுயநலவாதிகளா இந்தப் பள்ளி முதல்வர்கள்?
யாரிடம் இவர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இன்னும் பல கேள்விகள் என்னிடம் உள்ளன. உங்களிடமும் நிறைய கேள்விகள் இருக்கும். நீங்களும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். அதையும் இங்கே உலகத்தின் முன் வைக்கிறேன்.
இன்றைக்கு இது போதும். நாளை சந்திப்போம்.
உங்கள் எதிர்வினைகளை raghavanthambi@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டெல்லி தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லவேண்டியது நிறைய இருக்கும். சொல்லுங்கள். உங்கள் பெயர்களை ரகசியமாக வைத்துக் கொள்கிறோம்.
|