இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
டிசம்பர் இதழ் 2008 , டிசம்பர் 2008
 
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
அறக்கட்டளை
|
பதிப்பகம்
|
v2images
|
தொடர்பு
Vadakku Vasal
 
வடக்கு வாசல் இணையதள தொடக்க விழா
வடக்கு வாசல் கலை, இலக்கிய விஷயங்களில் ஈடுபாடுடைய டெல்லி தமிழர்களால் மிகப் பரவலாக அறியப்பட்ட பெயர்.  தனது நான்காம் ஆண்டு தொடக்க விழா, இலக்கிய மலர் வெளியீடு, இணையதளம் தொடக்கம் என முப்பெரும் விழாக்களை டெல்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் 14-09-2008 அன்று மாலை கொண்டாடியது. 

அதற்கு முன் தினம் தான் டெல்லியை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு நடந்திருந்தது.  நடிகர், நடிகைகளைத் தவிர வேறு யாரையும் பார்ப்பதற்காக தங்கள் பொன்னன நேரத்தை வீணாக்கும் எண்ணம் இல்லாதவர்கள் தமிழர்கள்.  அதிலும் குண்டு வெடிப்பு வேறு.  இருந்தாலும் கூட்டம் வரும் என்று நினைத்து மாலை 6.30 மணி விழாவிற்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் மூத்த பேராசிரியரான திரு.நாச்சிமுத்து அவர்களுடன் அரங்கத்திற்கு 5.30 க்கே சென்று விட்டேன்.  எதிர்பார்த்ததைப் போலவே அந்த நேரத்திற்கே பாதி அரங்கம் நிரம்பியிருந்தது.  காரணம் இரண்டு, ஒன்று விழாவின் நாயகன் அப்துல் கலாம் என்பது, இரண்டு விழாவை நடத்துவது வடக்கு வாசல்.  விழா தொடங்கிய போது பலர் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தனர்.

தொலைக்காட்சி சானல்களிலிருந்து நிகழ்ச்சியை படம் பிடிக்க வந்தவர்கள் பாடு திண்டாட்டம்.  எங்கே காமிராவை வைத்தாலும் இங்கே வைக்காதே, தள்ளி வை என்று பார்வையாளர்களின் கட்டளை, எனக்கு பின்னல் அமர்ந்திருந்த 70 வயதுக்காரர் ஒருவர், நாங்கள் கலாமை பார்க்கத்தான் வந்திருக்கிறோம் காமிராவை வைத்து அவரை மறைக்காதே என்று காமிராமேனை பார்த்து கோபமாக கத்தினர்.  கலாமின் கவர்ச்சி அப்படி.  பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரை பார்க்க இவ்வளவு கூட்டம் வருவது ஆச்சர்யம் தான்.
 

வடக்கு வாசல் இதழின் ஆசிரியர் யதார்த்தா கி.பென்னேஸ்வரனை   பாராட்ட வேண்டும்.  விழா 6.45க்கு தொடங்கி விட்டது.  வரவேற்புரை நிகழ்த்திய பி.அனந்த கிருஷ்ணன் (யாரையும் வரவேற்பதாக அவர் சொல்லவில்லை.    மறந்து விட்டார் என்று சொல்லவில்லை.  பேச்சு சுவாராஸ்யத்தில் அதை மறந்து விட்டார் என்று நினைக்கிறேன்)  இது வடக்கு வாசலுக்கு நாற்பதாம் ஆண்டு என்றார்.  ஒவ்வொரு ஆண்டும் பத்து ஆண்டுகளுக்கு சமம் என்றார்.  வடக்கு வாசலை ஆரம்பித்த போது தமிழில் பத்திரிகையை நடத்துவதை விட ரயில் தண்டவாளத்தில் தலையை கொடுப்பது மேல் என்ற மேலான அறிவுரையை தான் கே.பி.க்கு நல்கியதாக கூறினர்.  கே.பி. நல்ல அறிவுரைகளை கேட்கக் கூடியவர் இல்லை போலிருக்கிறது. 

தலைமையுரை ஆற்ற வந்த அறிவியலாளரும் கவிஞருமான ய.சு.ராஜன் (தாகூரை நினைவுபடுத்தும் தீர்க்கமான முகம்) வடக்கு வாசலை மூன்று வருடங்களாக தொடர்ந்து வெற்றிகரமாக (பொருளாதார ரீதியில் அல்ல) நடத்தி வருவதற்கு ஆசிரியரின்  மனைவியே முக்கியமான காரணம் எனக்கூறி அவரை மேடைக்கு அழைத்து பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
 
வடக்கு வாசல் இணையதளத்தை தொடங்கி வைத்த கலாம் அதன் இலக்கிய மலரை வெளியிட ய.சு.ராஜன் பெற்றுக் கொண்டார்.  இலக்கிய மலரில் இந்திரா பார்த்தசாரதி மற்றும் கி.ராஜநாராயணன் உட்பட பலர் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருந்தனர்.  எழுதுவதை அநேகமாக நிறுத்தி விட்ட இந்திரா பார்த்தசாரதி வடக்கு வாசலுக்காகவே மீண்டும் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். 

 
டாக்டர் அப்தல் கலாம்  வடக்கு வாசல் இதழில் வெளியான தனக்கு பிடித்த கவிதைகள் இரண்டை குறிப்பிட்டார்.  திருக்குறள் மற்றும் கம்பராமாயணத்திலிருந்து மேற்கொள்கைகளை காட்டி பேசிய அவரது பேச்சிற்கு பல இடங்களில் பலத்த கைத்தட்டல்கள்.  நல்ல பத்திரிகை ஒன்றை நடத்தி வரும் கே.பென்னேஸ்வரனை ஆதரிக்கும் விதமாக நீங்கள் அனைவரும் வடக்கு வாசல் பத்திரிகையை வாங்க வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளை விடுத்தார்.    தனது பேச்சின் இறுதியில் தேசத்தின்
   
முன்னேற்றத்திற்காக பார்வையாளர்கள் அனைவரையும் பிரார்த்தனை செய்யச் சொன்னர்.  பிரார்த்தனையை அவர் ஒவ்வொரு வரியாக கூற பார்வையாளர்கள் உற்சாகத்துடன் திரும்பக் கூறினர்.  நிகழ்ச்சி முழுவதையும் தனது வெண்கலக் குரலால் அற்புதமாக தொகுத்து வழங்கினர் திரு.ஜான் சுந்தர்.
 
தனது எல்லா விழாக்களிலும் செய்வதைப் போல இதிலும் விழா சம்பந்தப்பட்ட அனைவரையும் கெரவித்தார் பென்னேஸ்வரன்.
 
க.திருநாவுக்கரசு

 
வடக்கு வாசல் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் இணைய தள துவக்க விழாவில் Dr.APJ.Abdul Kalam அவர்கள் ஆற்றிய உரை

 

வடக்கு வாசல் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் இணைய தள துவக்க விழாவில் Dr.APJ.Abdul Kalam அவர்கள் ஆற்றிய உரை
www.abdulkalam.com