கடந்த சில நாட்களாக வடக்கு வாசல் மாத இதழிலும் இந்த இணையதளத்திலும் டெல்லியில் உள்ள ஏழு தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்த பதிவுகளை வெளியிட்டு வந்தோம். தமிழ்ப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து தங்களுடைய வேதனைகளை பலர் நேரில் பகிர்ந்து கொண்டார்கள். ஒருசிலர் வெளிப்படையாகக் கடிதம் வழியாகத் தங்கள் குறைகளையும் முறையீடுகளையும் பதிவு செய்தார்கள்.
ஒருசிலர் அஞ்சல் அனுப்பி விட்டு வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள். ஒரு சிலர் தொலைபேசி வழியாகப் பல மர்மக் கதைகளையும் மிஞ்சும் வண்ணம் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களை எழுதித் தருமாறு கேட்டபோது காணாமல் போய்விட்டார்கள். ஒரு சிலர் மிகவும் தைரியமாக விஷயங்களை எழுதினார்கள்.
சில கடிதங்களை வெளியிட்டால் எழுதியவர்களுக்கு ஊறு நேருமே என்ற அக்கறையில் வெளியிடாமல் என்னிடமே வைத்துக் கொண்டேன்.
நாளுக்கு நாள் தமிழ்ப் பள்ளி நிர்வாகத்தினரின் முறைகேடுகள் அதிகரித்து வந்தன. தில்லித் தமிழ்க் கல்விக் கழக அமைப்புக்குத் தேர்தல்கள் நடத்துவதற்கான கெடு முடிவடைந்தும் தேர்தல்களை நடத்தாமல் தள்ளிப் போடுவதற்கான ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டார்கள்.
இந்தப் பள்ளிக்கூடங்களின் கல்விக் காவலர்களை உற்சாகப்படுத்துவது யார் என்றால் தில்லித் தமிழ்ச் சங்கம் போன்ற நல்ல அமைப்புக்களில் ஜனநாயகப் படுகொலையை செய்யத் தயாராக இருந்த சில செயல்வீரர்கள். இவர்கள் தங்கள் பிள்ளைகளை கான்வெண்ட் பள்ளிகளில் சேர்த்து வி்ட்டு ஊரார் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளப் பேயாக அலைந்தவர்கள். அலைந்து கொண்டிருப்பவர்கள்.
இவர்களைப் போன்றவர்கள் அளித்த உற்சாகத்தில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் நான்கைந்து பேர்கள் மட்டுமே எல்லாம் என்கிற அளவில் ஜனநாயகப் படுகொலைகள் தொடர்ந்தன. ஆசிரியர்கள் இழிவு படுத்தப்பட்டார்கள். பழி வாங்கப்பட்டார்கள். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆசிரியரிடமும் பல கதைகள் உள்ளன. எல்லாம் ஒவ்வொன்றாக வெளியில் வருவதற்குக் காத்திருக்கின்றன. விரைவில் வெளிவரும்.
இப்போது இந்தக் கல்வித் தந்தைகளுக்கு எதிராக அவர்களின் செயற்குழுவில் இருந்தவர்களே வெளியில் வந்து குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆசிரியர்கள் பலர் நியாயம் கேட்டு நீதிமன்றத்தின் வாசல்களைத் தட்டத் துவங்கினார்கள்.
இடையில் பள்ளிக்கான ஆசிரியர்கள் நியமனம் நடைபெற்றது. அந்த நியமனத்தில் பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதில் நிர்வாகக் குழுவில் இ்ருக்கின்றவர்களின் உறவினர்கள் பலருக்கும் தகுதியை மீறி ஆசிரியர் பணிக்கு அமர்த்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர். அவற்றுக்கு ஆதாரங்களும் உள்ளன.
ஒரு வாரத்துக்கு முன்னால் ஒரு அமைப்பு நடத்திய தேர்வில் 2 மதிப்பெண்கள் கூடப் பெறாத ஒருவர் தில்லித் தமிழ்ப் பள்ளியில் பலரையும் தாண்டிச்சென்று ஒரு பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது உலக அதிசயங்களில் ஒன்று. அந்தப் பணியில் அவர் சேர்த்துக்கொள்ளப்பட்டதற்கான ஒரே தகுதி அவருக்கு வேண்டியவர் தேர்வுக்குழுவில் இருந்ததுதான். இதுபோல ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேண்டியதைச் செய்தார்கள். எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பெறப்பட்ட சில ஆவணங்கள் தலைசுற்ற வைக்கின்றன.
இவற்றை எல்லாம் எதிர்த்து சில நண்பர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கின்றனர். பள்ளிகளின் செயற்குழுவுக்கு தேர்தல்கள் உடனடியாக நடத்த வேண்டு்ம் எனச் சிலர் மாண்புமிகு நீதிமன்றத்தை அணுகி இருக்கின்றனர். பள்ளிக்குத் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டும் ஏதோ ஒரு காரணம் காட்டி தேர்தல்களை ஒத்திப் போட முயன்று வருகிறது நிர்வாகம்.
இதில் உச்சசட்ட வேடிக்கை என்னவென்றால் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சமீபத்தில் நடந்த பேரவைக்கூட்டத்தில் ஜனநாயகம் பற்றியும் பேரவைக்கு இருக்கும் ஆற்றல் பற்றியும் இவர்கள் பேசியதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. தங்களின் ஆளுகையில் இருக்கும் ஒரு அமைப்பில் ஜனநாயகத்தைப் படுகுழியில் ஆழப்புதைத்து விட்டு வேறு எங்கோ அதைத்தேடி இவர்கள் வந்திருப்பது வேறு எங்கும் காணமுடியாத அதிசயம் இல்லையா?
இந்த நிலையில் தேர்தல்கள் இதற்கு ஒரு தீர்வாக இருக்காது என்று எனக்குப் பட்டது.
இந்த முறைகேடுகளுக்கு எதிராக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில அடிப்படைத் தகவல்களை சேகரித்து நீதிமன்றம் வழியாக இவர்களை செயலற்றுப் போகச் செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கு முன்பு அரசுத் துறையின் கதவையும் தட்டிப் பார்க்கலாமே என்று தோன்றியது. ஒரு நல்ல நேர்மையான மனிதர் டெல்லி அரசு கல்வித்துறையில் இயக்குநராக சேர்ந்து இருக்கிறார் எனக் கேள்விப்பட்டேன். அவரை சந்தித்து முறையிடலாம் என்று நானும் சில நண்பர்களும் தீர்மானித்தோம்.
எனவே பள்ளியில் ஆண்டுகளாக நிலவி வருவதாக சொல்லப்படும் நிர்வாகச் சீர்கேடுகளைப் பட்டியல் இட்டு ஒரு முறையீடாக கல்வித்துறை மேலதிகாரிகளிடம் நானும் தமிழ்ப் பள்ளிகளில் அக்கறை உள்ள சில நண்பர்களும் அளித்தோம்.
இந்தச் சீர்கேடுகள் குறித்து முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம்.
இப்போது அந்த முறையீட்டின் வழியாக நியாயம் பிறப்பதற்கான சில நம்பிக்கைக் கீற்றுக்கள் தோன்றியுள்ளன. டெல்லி அரசின் கல்வித்துறை இந்தத் தமிழ்ப் பள்ளிகளின் சில சீர்கேடுகள் குறித்து ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்.
என் பெயரைக் குறிப்பிட்டு நான் அளித்த முறையீட்டின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவு இட்டிருப்பதாக பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் ஒட்டி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் இன்னும் அந்த அறிக்கையைப் பார்க்க வில்லை. அநேகமாக அந்த உத்தரவின் பிரதி எனக்கும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
சில பள்ளிகளுக்குச் சென்று முக்கியமான சில ஆவணங்களையும் கல்வித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். விசாரணை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். ஏதாவது முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டாலோ யாருக்காவது அவற்றில் தொடர்பு இருப்பதாகத் தெரிந்தாலோ அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடக்கூடாது. இவர்கைளத் தூண்டி விட்டுக் கொண்டிருப்பவாகளையும் உதவி செய்து கொண்டிருப்பவர்களையும் இவர்கிடம் உதவிகள் பெற்றுக் கொண்டிருப்பவர்களையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி வைக்க வேண்டும். இது வருங்காலத்தில் பலருக்கும் ஒரு பாடமாக அமையவேண்டும்.
இன்று என்னையும் என்னுடன் முறையிட்ட திரு.வி.பார்த்தசாரதி அவர்களையும் கல்வித்துறை மேலதிகாரிகள் அழைத்தார்கள். அவர்களுக்கு சொல்வதற்கு நிறைய விஷயங்கள் எங்களிடம் இருந்தன. தருவதற்குப் பல ஆவணங்கள் இருந்தன.
சொன்னோம் - தந்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள்.
இதற்கு இடையில் சில செயல் விரர்கள் வேறுவிதமான பொய்களைப் பரப்பி வருகிறார்கள். டெல்லியின் செங்கோட்டை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை நீங்கலாக மற்றவை எல்லாம் தன்னுடைய முயற்சியால் மட்டுமே விளைந்தவை என்று கூசாமல் சொல்லும் அளவுக்கு உண்மை பேசும் சத்திய சந்தர்களான இவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டு அவர்களின் பின்புறமாகத் திரும்பி நின்று சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள் தலைநகர் தமிழர்கள்.
இது பள்ளி நிர்வாகிகளுக்குத்தான் தீங்காக முடியும் என்று இவர்களுக்குத் தெரியவில்லை. இதுவரை நம்பிக் கெட்டதே போதும் என்று அவர்கள் இருக்கலாம். தவறான வழிகாட்டுதல்களுக்கு அவர்கள் மேலும் இரையாகாமல் இருக்கலாம். விதி யாரை விட்டது?
இதற்கு இடையில் சில நேர்மையான அதிகாரிகளின் கருணையால் இந்த விஷயத்தில் ஏதோ விடிவு காலம் பிறக்கும் போல இருக்கிறது. இடையில் இந்த விசாரணைகளுக்குக் குறுக்காக ஏதாவது தனிமனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அல்லது ஏதேனும் அரசியல் அதிகாரம் படைத்தவர்களோ குறுக்கிடாமல் இருக்க வேண்டும்.
அப்படி யாராவது குறுக்கிட்டால் ஊடகங்களின் வழியாகவும் நீதிமன்றங்களின் வழியாகவும் அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டு்ம் என்று இருக்கிறேன். இது குறித்து வேறு சில திட்டங்களும் என்னிடம் உள்ளன.
அந்த நடவடிக்கைகளை நான் எடுக்கும்போது அவற்றின் விளைவுகள் இந்தத் திசையில் நான் என்ன செய்தேன் என்பதைச் சொல்லிவிடும்.
இந்த வேள்வியில் நண்பர்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் உற்சாகமும் எனக்கு வேண்டும்.
இனி அடுத்த நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்
அன்புடன்
ராகவன் தம்பி
உங்கள் கருத்துக்களை raghavanthambi@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்புங்கள்.
|